நிசான் கார் தொழிற்சாலை தன்னுடைய கார் உற்பத்தியை நிறுத்தி, தொழிற்சாலையை மூடப்போவதாகவும், இதனால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்து உள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பதற்கு விளக்கம் அளித்துள்ள தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஓபிஎஸ் கூறுவது அனுமானம் அடைப்படையிலேயே தவிர ஆதரமற்றது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விடுத்துள்ள அறிக்கையில், தமிழ் நாட்டில் சென்னைக்கு அருகே இயங்கி வரும் நிசான் கார் தொழிற்சாலை தன்னுடைய கார் உற்பத்தியை நிறுத்தி, அத்தொழிற்சாலையை மூடப்போகும் சூழல் உருவாகி இருப்பதாகவும் அதன் காரணமாக பெருமளவில் வேலை இழப்பும், தமிழ் நாடு அரசுக்கு வருவாய் இழப்பும் நேரவிருப்பதாகவும் தெரிவித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர் செல்வம் அறிக்கை விடுத்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஓ. பன்னீர் செல்வத்தின் அறிக்கை, தமிழ் நாடுஅரசின் மீது ஏதாவது ஒரு வகையில் குற்றம் சுமத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதால் உண்மை நிலையினை விளக்க வேண்டியது எனது கடமையாகும் என தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார். ரெனால்ட் நிசான் நிறுவனத்திற்கு, பயணிகள் கார், எரிவாயு டீசல் எஞ்சின் மற்றும் கியர் பாக்ஸ் போன்றவற்றை உற்பத்தி செய்யும் பொருட்டுக் தங்கள் ஆட்சியில் தான் 2008 ம் ஆண்டு சென்னைக்கருகே ஒரகடம் தொழில் பூங்காவில் சுமார் 610 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அந் நிறுவனமும் தனது வணிக உற்பத்தியினைத் தொடங்கி இன்றளவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
ரெனால்ட் நிசான் நிறுவனம் மேற்குறித்த உற்பத்தி நிலையத்தில் உள் நாட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வண்ணம் பல்வேறு ரக பயணியர் வாகனங்களைத் தயாரிப்பதோடு, உலகளவில் 15க்கும் மேற்பட்ட ஏற்றுமதி சந்தைகளுக்குமான சேவைகளையும் வழங்கி வருகின்றது. அண்மையில் இந் நிறுவனம் தனது 50 ஆயிரமாவது மேக்னைட் எஸ்யூவி ரக காரினை வெற்றிகரமாகத் தயாரித்திருக்கின்றது.
உலகளாவிய சந்தை நிலவரப்படி செமிக் கண்டக்டர்களின் தட்டுப்பாடு நிலவி வந்தாலும், இந் நிறுவனம் தனது உற்பத்தியை சீரான நிலையில் வைத்திருப்பதாயும், உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு சந்தைகளுக்கான தேவைகளை ஒரகடத்தில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களைக் கொண்டே நிறைவு செய்வதாயும் தெரிவித்திருக்கின்றது. தமிழ்நாட்டில் தனது செயல்பாடுகளை வெற்றிகரமாகத் தொடர்ந்து செய்ய உறுதி பூண்டுள்ளதாகவும் ரெனால்ட் நிசான் நிறுவனம் மேலும் தெளிவாகத் தெரிவித்திருக்கிறது.
எனவே, ரெனால்ட் நிசான் தொழிற்சாலை மூடப்படும் சூழல் உருவாகிடக் கூடும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கூற்று முற்றிலும் கற்பனைகளால் வடிவமைக்கப்பட்ட அனுமானமே தவிர அடிப்படை ஆதாரமற்றதாகும். தொழிற்சாலை தொடர்ந்து இயங்கும் சூழலில், அங்கே பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் எனக் கூறுவதும் உண்மைக்கு மாறானதாகும்.
எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில், தமிழ் நாட்டில் எவ்விதக் குறையும் இன்றித் தொழில் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியினைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன என்பதனையும்; முதலமைச்சர் மீது கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாகவே உலகின் மிகப் பெரும் நிறுவனங்களின் முதலீடுகளைப் பெருமளவில் ஈர்க்கும் மாநிலமாகத் தமிழ்நாடு உருவெடுத்திருக்கின்றது என்பதனையும் இதன் வாயிலாகத் தெரிவித்துக் கொள்வதாக தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.