ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷ்ரேயஸ் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹராரேயில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இந்த நிலையில் 2வது டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களான வைபவ் சூர்யவ்ன்ஷி 20 ரன்களுக்கும், அபிஷேக் ஷர்மா 8 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனைத்தொடர்ந்து வந்த இஷன்கிஷன் அதிரடியாக ஆடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மறுமுனையில் திலக் வர்மா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் அரைசதம் விளாசினர். இஷன் கிஷன் 44 பந்துகளில் 81 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அதேபோல திலக் வெர்மா 29 பந்துகளில் 60 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது.
220 ரன்கள் என்கிற கடின இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஜிம்பாப்வே அணி 17.5 ஓவரில் 129 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமா பிரியன் பென்னெட் 32 எடுத்தார். இந்திய அணி சார்பில் அபிஷேக் ஷர்மா 3 விக்கெட்டுகளையும், ப்ரின்ஸ் யாதவ், யாஷ் தாகூர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இறுதியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்று பெற்றது. இதன்மூலம் தொடரை 2-0 என இந்திய அணி கைப்பற்றியது.




