சங்பரிவார் சக்திகளின் போலி ஏஜெண்டாக ஆளுநர் செயல்பட்டு கொண்டிருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல மருத்துவரும் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.எல்.சுப்பிரமணியனின் உறவினருமான பூவலிங்கம் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்ற ஆளுநரின் சர்ச்சையான கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் தெரித்தாவது: ”தமிழ்நாடு என்ற பெயர் வைக்க வேண்டும் என சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தார். நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த மசோதாவை திமுக ஆதரித்தது. பிறகு அண்ணா முதல்வரான பின், அவர் தமிழ்நாட்டிற்கு `தமிழ்நாடு’ என பெயர் வைக்க வேண்டும் என இலக்கிய உதாரணங்களை எடுத்து கூறினார்.
தமிழ்நாடு என்பது இலக்கியங்களில் இருக்கிறது. சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் தமிழ்நாடு என்றுதான் இருக்கிறது. எனவே இந்த பெயரை எல்லோரும் ஏற்றுக் கொண்டு, நான் `தமிழ்நாடு’ என்று சொல்வேன், நீங்கள் வாழ்க என்று கூற வேண்டும் என அண்ணா சொன்னார். காங்கிரஸ் கட்சி தலைவர்களும் அனைத்து கட்சி தலைவர்களும், அண்ணா `தமிழ்நாடு’ என்று சொல்ல வாழ்க என மூன்று முறை சொன்னார்கள். இப்படி ஒரு பெரிய வரலாறு இருக்கிறது.
இந்த வரலாறு தெரியாமல் ஆளுநர் புதிய குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நோக்கத்தோடு மட்டுமல்ல, அதற்குப் பின்னால் சங் பரிவார் சக்திகள் அவரை இயக்கிக் கொண்டிருக்கிறது. அவர்களின் கருவியாக அவர்களின் போலித்தனமான ஏஜெண்ட் ஆக ஆளுநர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் பெயரையும் மாற்றிக்கொண்டால் ரொம்ப நல்லது. தமிழ்நாடு என்ற பெயரை யாரும் மாற்ற முடியாது. அது சரித்திரத்தில் இடம் பெற்றது. தியாகத்தால் சூட்டப்பட்ட பெயராகும். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.