கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மைதிலி சிவராமன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 81.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினராகவும் ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவருமாக இருந்தவர் மைதிலி சிவராமன். மூத்த மார்க்சிஸ்ட் தலைவர்களில் ஒருவரான இவர், கீழ்வெண் மணி துயரத்தை நேரில் சென்று விசாரித்து ஆங்கிலத்தில் தொடர் கட்டுரை எழுதியவர். அது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. வாச்சாத்தி சம்பவத்தால் பாதிக்கப்பட்டோருக்காக போராடி உண்மைகளை ஆவணப்படுத்தினார்.
கடந்த சில வருடங்களாக உடல் நலமில்லாமல் இருந்த அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் 1939 ஆம் ஆண்டு பிறந்த மைதிலி சிவராமன், அமெரிக்காவில் மேற்படிப்பு படித்தவர். 1966-ம் ஆண்டு முதல் 68 ஆம் ஆண்டு வரை ஐநாவின் உதவி ஆராய்ச்சியாளராக இருந்த அவர், பாஸ்போர்ட் இல்லாமல் கியூபாவுக்குச் சென்றவர். அந்த நாட்டின் கம்யூனிசத் தாக்கத்தால், இந்தியா திரும்பியதும் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டவர்.
மறைந்த மைதிலி சிவராமன், கணவர் கருணாகரன், மகள் கல்பனா கருணாகரன் ஆகியோருடன் வசித்து வந்தார். மைதிலி சிவராமனின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.







