மத்திய நிதியமைச்சகம் அமைத்த ஜிஎஸ்டி குழுவில் தமிழக நிதியமைச்சரை இணைக்க ரவிக்குமார் எம்.பி., கோரிக்கைவிடுத்துள்ளார்.
சமீபத்தில் 8 மாதங்களுக்கு பின்னர் நடந்து முடிந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி, மருந்துகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்ததையடுத்து மத்திய நிதியமைச்சகம் இக்கோரிக்கைகள் குறித்து ஆராய குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழுவில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இணைக்கப்படவில்லை.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், மத்திய நிதியமைச்சகம் அமைத்த குழுவில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை இணைக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஜி. எஸ்.டி குழுவில் தமிழக நிதி அமைச்சர் புறக்கணிக்கப்பட்டது ஏன் என்றும் டிவிட்டர் வாயிலாக கேள்வியெழுப்பியுள்ளார். முன்னதாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா தடுப்பூசி, மருந்துகளுக்கான வரி விகிதத்தில் மாற்றங்கள் செய்யப்படவில்லை என தெரிவித்தார். இதனையடுத்து இக்கோரிக்கை குறித்து ஆராய மேகலயா முதலமைச்சர் தலைமையில் 8 மாநில பிரதிநிதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இதில் உ.பி, தெலுங்கானா, கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்களின் நிதியமைச்சர்களும், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களின் துணை முதல்வர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால், தமிழகம், மேற்கு வங்க மாநிலத்திலிருந்து எந்த ஒரு பிரதிநிதியும் இக்குழுவில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







