தலையணையால் அமுக்கி மனைவியை கொன்றுவிட்டு கொரோனாவால் இறந்ததாக நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டார்.
ஐதராபாத்தின் புறநகர் பகுதியில் வசித்து வந்தவர் ராமவத் விஜய். ஆட்டோ டிரைவரான இவர் மனைவி கவிதா (21). இவருக்கும் கவிதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. காரணம், கவிதாவுக்கு மற்றொருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டார் விஜய்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி, தூங்கிக்கொண்டிருந்த கவிதாவை தலையணையால் அமுக்கி கொன்ற விஜய், அவர் உடலை தனது ஆட்டோவிலேயே ஏற்றி சொந்த ஊரான வனஸ்தாலிபுரத்துக்கு கொண்டு சென்றார்.
அங்கு, கவிதா கொரோனாவால் உயிரிழந்து விட்டதாகவும் அவர் உடலை யாரும் தொட வேண்டாம் என்றும் கூறினார். இதை அவர்கள் நம்பினர். பின்னர் இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.
இந்நிலையில் கவிதா குடும்பத்தினருக்கு சந்தேகம் எழுந்ததை அடுத்து போலீசில் புகார் அளித்தனர். போலீசார், விஜய்யிடம் விசாரணை நடத்தினர். அப்போது கவிதாவை கொன்றதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







