குறைந்த விலையில் கணினி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்தவர் கைது!

குறைந்த விலையில் கணினி தருவதாகக் கூறி தொடர்ந்து பண மோசடியில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை அடையாறு காந்தி நகர் பகுதியில் உள்ள பழக்கடையில் பணியாற்றி வருபவர் சரிஜா (வயது…

குறைந்த விலையில் கணினி தருவதாகக் கூறி தொடர்ந்து பண மோசடியில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அடையாறு காந்தி நகர் பகுதியில் உள்ள பழக்கடையில் பணியாற்றி வருபவர் சரிஜா (வயது 35). இந்த பழக்கடைக்கு பழம் வாங்குவது போல் வந்த நபர் ஒருவர் சரிஜாவிடம் பேச்சு கொடுத்து, பின்னர் தான் கணினி விற்கும் ஏஜெண்டாக பணியாற்றி வருவதாக அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். மேலும் மிகவும் குறைந்த விலையில் கணினி வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய சரிஜா அந்த நபரிடம் 10,000 ரூபாயை கொடுத்துள்ளார். பின்னர் கணினியை உடனே கொண்டு வருவதாகக் கூறி கவனத்தை திசைதிருப்பி அங்கிருந்து தப்பியோடி உள்ளார்.

இது குறித்து சரிஜா அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் பழக்கடையிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கவனத்தை திசைதிருப்பி பணத்தை பெற்றுக்கொண்டு செல்லும் நபர் வடமாநிலத்தவர் போல் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து கவனத்தை திசை திருப்பி திருடும் வடமாநிலத்தவரின் புகைப்படங்களுடன் ஒப்பிட்ட போது போலீசாருக்கு அடையாளம் கிடைக்கவில்லை.

இதனால் தனிப்படை அமைத்து அந்த நபரை தீவிரமாக தேடிய போது அடையாறு பாலம் அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் சிசிடிவியில் பதிவான அதே நபர் என்பது தெரியவந்தது. அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் சிதம்பரம் பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 40) என்பதை போலீசார் கண்டறிந்தனர். இவர் ராயப்பேட்டையில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி கொண்டு ஆக்டிங் ஓட்டுநராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

சரவணன் பழக்கடைகளுக்கு சென்று அங்கு இருப்பவர்களிடம் பேச்சு கொடுத்து கணினியை குறைந்த விலையில் தருவதாக கூறி நம்பவைத்து கவனத்தை திசைதிருப்பி பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்து தப்பியோடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதே போல் ஈக்காட்டுதாங்கல், அடையாறு, சாஸ்திரி நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பழக்கடை வியாபாரிகளிடம் ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சரவணன் மீது வழக்குபதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.