மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பார்வதி யானைக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும்
விழாக்கள் நடைபெறும். இந்த விழாக்களின் போது சுவாமி, அம்மன் வீதி உலாவின் போது யானை முன்னே செல்லும். இதற்காக கோவில் விழாவிற்கு பயன்படுத்துவதற்காக கடந்த 2000 ஆம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து பார்வதி என்ற பெண் யானை வாங்கப்பட்டது. தற்போது சுமார் 26 வயதான பார்வதி யானையை கோயில் நிர்வாகம் பராமரித்து வருகிறது.
இதையும் படிக்கவும் : வெப்பம் தணிந்தது; உதகையில் அதிகாலை முதல் சாரல் மழை…
இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு கோவில் விழாவில் பங்கேற்ற பார்வதி யானை விழாவின் போது காலில் சிறிய அளவு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அதிக கவனத்துடன் யானையை பராமரிக்க வேண்டும் என கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்.
இதனிடையே கடந்த 2020ம் ஆண்டு பார்வதி யானைக்கு இரண்டு கண்களிலும் கண்புரை
ஏற்பட்டு வெண்படலம் ஏற்பட்டதன் காரணமாக முதலில் சென்னையில் உள்ள கால்நடை
மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்த பின்னர் தாய்லாந்து மருத்துவகுழுவினா்
கோயிலுக்கு அழைத்துவரப்பட்டு யானையை நேரடியாக பரிசோதனை செய்து சிகிச்சை
அளித்தனர்.
இதனை தொடர்ந்து யானையின் உடல்நலன் குறித்து அவ்வபோது காணொளி மூலமாகவும் ஆலோசனைகளை அளித்து வருகின்றனர். இதனிடையே கோயில் யானை பார்வதிக்கு தற்போது மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஒருவாரமாக தொடர் வயிற்றுபோக்கு ஏற்பட்ட நிலையில் யானை சோர்வாக உள்ளதால் யானை நடைபயிற்சிக்கு செல்லவில்லை. தொடர்ந்து கால்நடை மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஒரு வாரமாக எழுந்து நடக்க முடியாத நிலையில் படுத்த நிலையிலயே பார்வதி யானை இருப்பதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 4890 கிலோ எடை இருந்த பார்வதி யானை தொடர் உடல்நலக்குறைவு காரணமாக தற்போது எடை குறைந்தும் காணப்படுகிறது.







