மதுரை அழகு சிறையில் நடைபெற்ற வெடி விபத்தில் ஐந்து பேர் பலியான நிலையில் பட்டாசு ஆலையின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகு சிறையில், அனுசியா வெள்ளையப்பன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. மொத்தம் இரண்டு கட்டடங்களில் பணியாற்றி வந்த புளியகவுண்டன்பட்டி மற்றும் வடக்கம்பட்டியைச் சேர்ந்த ஐந்து பேர் இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் அனைவரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து இந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வெடிவிபத்தில் காயமடைந்தவர்களுக்குச் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜாமணி கொடுத்த புகாரின் அடிப்படையில், பட்டாசு ஆலையின் உரிமையாளர் அனுசுயா தேவி, வெள்ளையன், பாண்டி ஆகிய மூன்று பேர் மீதும் 8 பிரிவுகளின்கீழ் சிந்துபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து உரிமையாளர் அனுசியா தேவியை திருமங்கலம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








