சீவலப்பேரியில் விவசாயி கொலை செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு அமைப்பினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியரகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியைச் சேர்ந்தவர் மாயாண்டி(38). கால்நடை விவசாயியான இவர் நேற்று வழக்கம் போல் சீவலப்பேரி – கலியாவூர் சாலையில் மாடு மேய்த்துக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் மாயாண்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த மாயாண்டி சம்பவ இடத்திலையே உயிரிழந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சீவலப்பேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் சரவணகுமார் மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்தனர். பின்னர் உயிரிழந்த மாயாண்டியின் உடல் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் முதற்கட்ட விசாரணையில், இதே பகுதியில் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட கோயில் பூசாரியான சிதம்பரத்தின் உறவினர் தான் மாயாண்டி என்பது தெரியவந்தது. சீவலப்பேரியில் உள்ள புகழ்பெற்ற கோயிலில், கடைகள் கட்டி வாடகைக்கு விடுவது தொடர்பாக, இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், கோயில் பூசாரியான சிதம்பரம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து சீவலப்பேரியில் இரு சமூகத்தைச் சேர்ந்த தரப்பினர் மோதிக் கொண்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. பூசாரியின் கொலைக்கு நீதி கேட்டு தொடர் போராட்டங்களும் நடைபெற்ற நிலையில், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பூசாரி சிதம்பரத்தின் கொலை வழக்கில், தற்போது கொலை செய்யப்பட்ட மாயாண்டி, அதிக ஆர்வம் காட்டியதாக கூறப்படுகிறது. குறிப்பாக சாட்சிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வது, அவர்களுடன் நெருங்கிப் பழகுவது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். எனவே கோயில் பூசாரியை கொலை செய்த கும்பல் தான் தற்போது மாயாண்டியையும் கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் விவசாயி மாயாண்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏழு பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அங்கு பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. இதனால் சீவலப்பேரி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் நியூஸ்7 தமிழுக்கு தகவல் அளித்துள்ளார்.
இந்த படுகொலைச் சம்பவத்தை கண்டித்து இன்று பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.