மதுரை விமானநிலையத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய சம்பவத்திற்காக பாஜக மதுரை மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் மன்னிப்பு கோரினார். பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்த இராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் போது திமுக – பாஜகவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசினர். இச்சம்பவம் தொடர்பாக 5 க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சமூக வலைதளங்களில் இச்சம்பவம் பெரும் பேசு பொருளாக மாறியது. பழைய திமுகவாக இருந்தால் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்குமா ? என கேள்விகள் எழுந்தன. இதற்கிடையே, மதுரையில் நிதியமைச்சர் பி.டி.ஆரின் ஆதரவாளர்கள் மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக பாஜக மாவட்டத்தலைவர் டாக்டர் சரவணன் மன்னிப்பு கோர வேண்டும் என மதுரை மாநகர மேயரின் கணவர் பொன் வசந்த் தரப்பினர் அவரது மாமனாருக்கு நெருக்கடி கொடுத்துள்ளதாக தெரிகிறது.
இதனையடுத்து யாரும் எதிர்பாரதவிதமாக மதுரை பாஜக மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் நிதியமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து விமானநிலையத்தில் நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கோரினார். பின்னர் டாக்டர் சரவணன் செய்தியாளர்களிடம் பேசுகையில் “இராணுவ வீரரின் உடலுக்கு வீர வணக்கம் செலுத்த சென்று இருந்தோம், என்ன தகுதி அடிப்படையில் அஞ்சலி செலுத்த வந்தீர்கள் என நிதியமைச்சர் கேட்டார்.இதனையடுத்து விமான நிலையத்தில் விரும்பதகாத நிகழ்வுகள் நடந்ததுவிட்டது. விமான நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் என் மனதை உறுத்தி கொண்டே இருந்தது. அரசின் சார்பில் மரியாதை செலுத்தியபின்னர் மற்றவர்கள் விமானநிலையத்திற்கு வெளியே அல்லது ராணுவ வீரரின் வீட்டில் மரியாதை செலுத்தலாம் என அமைச்சர் பிடிஆர் கூறினார்.
அதன்பின்னர் இராணுவ வீரரின் உடல் அரசு விதிமுறைகள் படி அஞ்சலி செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அமைச்சரின் கருத்தை நான் தனி மனித தாக்குதலாக எடுத்து கொண்டேன். நான் பாரம்பரியமாக திராவிட குடும்பத்தில் இருந்து வந்தவன். ஓராண்டு முன் பாஜகவில் சேர்ந்தேன், பாஜக சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வந்தனர், அதையும் பொறுத்துக்கு கொண்டு நான் பாஜகவில் பயணித்தேன். இது ஒரு புறமிருக்க அமைச்சர் கார் மீதான தாக்குதல் எனக்கு மன உளைச்சலை உண்டாக்கியது. எனக்கு தூக்கம் வராத காரணத்தால் நள்ளிரவு நிதியமைச்சரை சந்தித்தேன். அவரிடம் மதுரை விமானநிலையத்தில் நடைபெற்ற விரும்பதகாத காரணத்திற்காக மன்னிப்புக்கோரினேன்.
பாஜக தொண்டர்கள் கட்டுபாட்டை மிறி நடந்து கொண்டது வருத்தம் அளிக்கிறது. நிதியமைச்சர் இந்நிகழ்வை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இது போன்ற துவேசமான அரசியலை செய்ய நான் ஒரு ஆளாக இருக்க கூடாது என நினைதேன். அமைச்சரை சந்தித்து மன்னிப்பு கேட்டதால் மனது இலகுவாக மாறி உள்ளது. நான் தனிப்பட்ட முறையில் அமைச்சரை சந்தித்தேன், பாஜகவின் பதவியை விட மன அமைதி மிக முக்கியமானது. பாஜகவில் உறுதியாக நான் தொடர மாட்டேன். பாஜகவின் மத, வெறுப்பு அரசியல் எனக்கு பிடிக்கவில்லை. காலையில் பாஜகவில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அனுப்பி வைக்க உள்ளேன். திமுக என்னுடைய தாய் வீடு, திமுகவில் இணைவது குறித்து முடிவு எடுக்கவில்லை, திமுகவில் சேர்ந்தாலும் தவறில்லை, டாக்டர் தொழிலை பார்க்க போகிறேன் எனக் கூறினார்.
மதுரை ஹரி கிருஷ்ணன்









