நேற்று (05-01-2026) பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்று மாலை 17.30 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது இன்று (06-01-2026) காலை 05.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறகு, மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நகரக்கூடும் எனவும் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இன்று (டிச.6) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் உள் தமிழகத்தில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாளை கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் உள் தமிழகத்தில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதுக்கோட்டை, ராமேஸ்வர மீனவர்களுக்கு மீன்வளத்துறை
முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,
“காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் யாரும் நாளை ( 07.01.2026 ) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என எச்சரிக்கப்படுகிறது. படகுகளை பாதுகாப்பான இடத்தில் கரையேற்றி வைக்கவும், மீன் பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







