வங்கக் கடலில் வரும் 7-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 9-ம்தேதி புயலாக வலுப்பெறும் என்றும், அதன் காரணமாக தெற்கு தீபகற்ப இந்திய பகுதியில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்றைய தினம் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்திருக்கும் நிலையில், வெப்ப அலையை தணிக்க புயல் உருவாகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. மே 8ம் தேதி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் பேசுகையில், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 6-ம் தேதி வளிமண்டலத்தில் காற்றுசுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் தாக்கத்தால் 7-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, 8-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன் பிறகு 9-ம் தேதி புயலாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து மத்திய வங்கக்கடல் நோக்கி வடக்கு திசையில் நகரக்கூடும். இதனால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து வரும் நாட்களில் தெரிய வரும். தற்போது தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. வட தமிழகத்தில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக மே 5 தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், 6, 7 தேதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
வரும் 6, 7 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 7 டிகிரி ஃபாரன்வீட் வரை உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
பருவ மழை துவங்குவதற்கு முன்பான காலக்கட்டத்தில் இந்த ஆண்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கூடுதலாக மழைப்பொழிவு கிடைக்கப் பெற்றுள்ளது. மார்ச் 1 முதல் மே 3ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்திய துனை கண்டத்தில் இயல்பை விட 28% கூடுதல் மழை பெய்துளளது. இதில் அதிகபட்சமாக மத்திய இந்திய பகுதியில் 268% கூடுதல் மழையும் – ஆந்திரா கர்நாடகா கேரளா தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கிய தெற்கு தீப கற்ப இந்திய பகுதிகளில் 88% கூடுதல் மழைஉம பெய்துள்ளது என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சித்திரை தொடங்கியது முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடும் வெப்பம் வாட்டி வந்தது. இதன் காரணமாக பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்த்து வந்தனர். இதனிடையே, கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் சற்று தணிந்துள்ளது.
இந்நிலையில், அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியுள்ளது. இது வரும் 29-ம் தேதி நிறைவடைகிறது. இந்த காலகட்டத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும். எனினும், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என்பதால் இந்த முறை அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பநிலை கடுமையாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா