ஒரே மேடையில் முதலமைச்சர் ஸ்டாலின், ராகுல்காந்தி பிரசாரம்!

கோவையில் நடைபெறவுள்ள பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ராகுல்காந்தி பங்கேற்கவுள்ளார்.  தற்போதைய மக்களவையின் பதவி காலம் வரும் ஜூன் 16ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் தேர்தல் நடைபெற்று 18-வது மக்களவை அமைக்கப்பட வேண்டும்.  இதனால்…

கோவையில் நடைபெறவுள்ள பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ராகுல்காந்தி பங்கேற்கவுள்ளார். 

தற்போதைய மக்களவையின் பதவி காலம் வரும் ஜூன் 16ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் தேர்தல் நடைபெற்று 18-வது மக்களவை அமைக்கப்பட வேண்டும்.  இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் தேதிகள் குறித்த அறிவிப்பை  கடந்த 16-ந் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது.  அதன்படி,  மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி நடைபெறுகிறது.  2-ம் கட்ட தேர்தல்கள் ஏப்ரல் 26-ம் தேதியும்,  3-ம் கட்ட தேர்தல் மே 7-ம் தேதியும்,  4-ம் கட்ட தேர்தல் மே-13-ம் தேதியும்,  5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும்,  6-ம் கட்ட தேர்தல் மே-25-ம் தேதியும்,  7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ந் தேதி நடைபெறும் என்றும்  இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

அதன்படி,  தமிழகம்,  புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில்  முற்கட்ட  பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது.  அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. வேட்புமனுத்தாக்கல் முடிந்து  அனல் பறக்கும்  பிரசாரம் நடைபெற்று வருகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  அமைச்சர்கள்,  பிரசார பீரங்கிகள்,  எதிர்க்கட்சி தலைவர்கள்,  அரசியல் கட்சி தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் தேர்தல் களத்தில் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் கைப்பற்றும் நோக்கில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.  தேர்தல் தேதி நெருங்கி வருவதால்,  அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.  பிரதமர் மோடி.  தமிழகத்தில் 4 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்,  ராகுல்காந்தி  முதலமைச்சர் ஸ்டாலினுடன் இணைந்து, கோவையில்  இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.

இது குறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“2024 ஏப்ரல்-19 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, எம்.பி.,  இணைந்து வருகிற 12-04-2024 வெள்ளிக் கிழமை அன்று,  இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை,  செட்டிபாளையம் L&T பை-பாஸ் ரோடில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்” என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.