உள்ளாட்சித் தேர்தல்; மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அலோசனை கூட்டம்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.   தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும்…

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

 

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 28-ம் தேதிகளில் தேர்தல் நடந்தது. மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. அதன் பின் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியதால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத ஒன்பது மாவட்டங்களில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கொரோனா பெருந்தொற்றைக் காரணம் காட்டி தேர்தலை நடத்தாமல் இருப்பது ஏற்புடையதல்ல என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.

 

இதையடுத்து உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ள தேர்தல் ஆணையம் அதற்கான அலுவலர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன. அந்தவகையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. காலை 10 மணியளவில், அக்கட்சி தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.