சென்னையில் உள்ள 200 வார்டுகளில் போட்டியிடுவதற்காக 3 ஆயிரத்து 546 மனுக்கள் பெறப்பட்டதாகவும், இதில், 228 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்து பல நாட்கள் ஆன நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது. இதில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. பின்னர் விடுபட்ட மாவட்டங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப். 19ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்திருந்தார்.
ஜனவரி 28ம் தேதி வேட்புமனு தாக்கல், பிப்.4ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் எனவும் தேர்தல் ஆணையர் அறிவித்திருந்தார். அதேபோல பிப்.5ம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை எனவும், பிப்.7ம் தேதி மனுவை வாபஸ் பெற இறுதி நாள் என்றும் அதேபோல வாக்கு எண்ணிக்கை பிப்.22ம் தேதி நடைபெறம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பிப்ரவரி 4ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், நேற்று வேட்புமனுக்கள் மீதனா பரிசீலனை தொடங்கியது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் வேட்பு மனுதாக்கல் நிறைவடைந்த நிலையில், நேற்று மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இந்நிலையில், சென்னையில் உள்ள 200 வார்டுகளில் போட்டியிடுவதற்காக 3 ஆயிரத்து 546 வேட்புமனுக்கள் பெறப்பட்டதாகவும், இதில், 228 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 303 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.








