“என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்த பின் மது, ஊழல் முடிவுக்கு வரும்” – உள்துறை அமைச்சர் அமித்ஷா!

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த பின் மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்து விடும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (மார்ச் 25) டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சந்திப்பின்போது தமிழக அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்றுள்ளது.

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை தொடர்பாகவும் உள்துறை அமைச்சரிடம் தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எடுத்துரைத்துள்ளார். மேலும் தமிழ்நாடு அமைச்சர்கள் மேலான ஊழல் குற்றச்சாட்டுகள், டாஸ்மாக் ஊழல் தொடர்பான விசயங்களையும் எடுத்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “2026-ல் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமையும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்து விடும்” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.