இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் 100 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டி20, ஒருநாள் போட்டி தொடரை விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டி தொடங்கும் நேரத்தில் மழை குறுக்கிட்டது.
மழை காரணமாக மைதானத்தில் அதிக அளவில் ஈரப்பதம் உள்ளது. இதனால் இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான 3-வது ஒருநாள் போட்டிக்கான டாஸ்போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் ஈரப்பதம் நீங்கிய பின்னர் இந்தப் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து தென்ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக மலான் மற்றும் டி காக் களமிறங்கினர். இன்னிங்சின் 3-வது ஓவரில் வாசிங்டன் சுந்தர் பந்துவீச்சில் டி காக் 6 ரன்களில் அவேஷ் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க வீரர்கள் மலான் (15 ரன்கள்) , ஹென்ரிக்ஸ் (3 ரன்கள்) , மார்க்ரம் (9 ரன்கள்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
குல்தீப் யாதவ் பந்துவீச்சில் சிக்கிய தென் ஆப்பிரிக்கா வீரர்கள் இமாட், நோர்ட்ஜெ ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 27.1 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
அந்த அணியில் அதிகபட்சமாக க்ளாஸென் 34 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும், சுந்தர், சிராஜ், ஷபாஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச இலக்காக 99 ரன்களை பதிவு செய்துள்ளது. 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.







