உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
உத்தரபிரதேசத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாதியை நிறுவியவர் முலாயம் சிங் யாதவ். இவர் உத்தரபிரதேசத்தில் 3 முறை முதலமைச்சராக இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். வயது முதிர்வு காரணமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்ட அவர் கடந்த 2-ந்தேதி அரியானாவின் குருகிராமில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு கவலைக்கிடமான முறையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை நேற்று முன்தினம் மிகவும் மோசமடைந்தது. எனவே உயிர் காக்கும் கருவிகள் துணை கொண்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முலாயமின் உயிரை காக்க டாக்டர்கள் கடுமையாக போராடினர். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று காலை 8.16 மணியளவில் முலாயம் சிங் யாதவ் காலமானார்.
இதைத்தொடர்ந்து ஏராளமான அரசியல் கட்சித்தலைவர்கள், சமாஜ்வாதி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர். இதில் முக்கியமாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேதந்தா மருத்துவமனைக்கு சென்று முலாயம் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதேபோல் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் முலாயம் சிங் யாதவின் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரபிரதேசத்தின் இடாவா மாவட்டத்துக்கு உட்பட்ட சைபாய் கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரின் உடல், நுமாய்ஷ் மைதானத்திலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதைக்கு பின் தகனம் செய்யப்பட்டது.
இறுதிச் சடங்கில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், அவரது தயாரும் சமாஜ்வாதி எம்.பி.யுமான ஜெயா பச்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.







