பழனி-கொடைக்கானல் சாலையில் உள்ள ஹோட்டல் வளாகத்தில் புகுந்த காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் புளியமரத்து செட் உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள
இப்பகுதியில் தனியார் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டல்
வளாகத்தில் நேற்று இரவு ஒற்றை காட்டு யானை ஒன்று உள்ளே புகுந்தது.
பழனி-கொடைக்கானல் சாலையில் சென்ற ஒற்றை காட்டுயானையை ஹோட்டலில்
தங்கியுள்ளவர்கள் செல்போன்களில் படம் பிடித்த போது, திடீரென ஹோட்டல்
வளாகத்திற்குள் புகுந்ததால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து தப்பித்து ஓடினர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.
கடந்த சில மாதங்களில் ஒற்றை காட்டு யானையால் கோம்பைபட்டியில் ஒருவரும், சத்திரபட்டியில் ஒருவரும் அடுத்துதடுத்து உயிரிழந்துள்ள நிலையில், தற்போது கொடைக்கானல் செல்லும் சாலையில் சுற்றிவரும் ஒற்றை காட்டு யானையால், அப்பகுதி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் இரவு நேரத்தில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம் குறித்து கண்காணிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







