கைதி படத்தின் அடுத்த பாகம் நிச்சயமாக உருவாகிறது என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.
மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், இரண்டாவதாக இயக்கிய படம், ’கைதி’. கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்பட பலர் நடித்து வெளியான இந்தப் படம், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தெலுங்கிலும் வெளியாகி வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார்.
இந்தப் படம் இப்போது இந்தியில் ரீமேக் ஆக இருக்கிறது. அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கிறார். இதற்கிடையே இந்தப் படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்பதாக படம் வெளியான நேரத்தில் கூறப்பட்டது. ஆனால், விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்க இருக்கிறார்.
இதனால், ’கைதி 2’ உருவாகுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு சமூக வலை தளத்தில் பதில் அளித்துள்ள தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ’கைதி 2’ படம் கண்டிப்பாக உருவாகும். அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.







