சட்டப்பேரவையில் காவிரி விவகாரம் தொடர்பாக தனி தீர்மானத்தை தாக்கல் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செயற்கையான நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் 21-ம் தேதியுடன் முடிவடைந்து, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டால் மீண்டும் 6 மாதங்களில் கூட்டப்பட வேண்டும். அக்டோபர் 9-ம் தேதி சட்டப்பேரவை கூடுவதாக, கடந்த மாதம் 20-ம் தேதி சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அதன்படி, சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூடியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பேரவை தொடங்கியதுமே முன்னாள் உறுப்பினர்கள் லியாவுதீன் சேட், பழனியம்மாள், ஆண்டமுத்து ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், முன்னாள் தலைமை செயலாளர் சபாநாயகம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்களின் மறைவுக்கு பேரவையில் உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
தொடர்ந்து காவிரி விவகாரம் தொடர்பான தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். பின்னர் தீர்மானத்தின் மீது உரையாற்றிய அவர், “உழவர்கள் பருவத்தே பயிர் செய்ய ஏதுவாக முறையாக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி அன்று தண்ணீர் திறந்து வைத்தோம். செயற்கையான நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்கியுள்ளது. பிலிகுண்டுவில் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீருக்குப் பதிலாக குறைவாகவே கிடைக்கப் பெற்றோம்.
இதையும் படியுங்கள் : தண்ணீர் வீணாகாமல் இருக்க தெர்மாகோல் போட்டு மூடி வைத்துள்ளோம்..! – செல்லூர் ராஜூ கேள்விக்கு துரைமுருகன் பதில்
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாதவாரியாக அளிக்க வேண்டிய நீரினை வழங்க மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சரை சந்தித்து அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தினார். கர்நாடக அரசு வழங்க வேண்டிய நீரை வழங்காததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. கர்நாடக அரசு உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை. தேவைப்படின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சம்பா பயிரை காப்பாற்ற வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது. உணவுத் தேவைக்கு மட்டுமல்ல, உயிர்த் தேவைக்கான நீரை வாதிட்டு பெற்றுத் தருவோம். அனைத்துவித முயற்சிகளையும் தயங்காமல் செய்வோம்” என்று தெரிவித்தார்.