கன்னியாகுமரி, பகவதி அம்மன் கோயில், வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துக்கான கயிற்றை, திரளான கிறிஸ்துவர்கள், தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து வழங்கினர்.
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில், வைகாசித் திருவிழா ஆண்டுதோறும் பத்து நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு விழாவுக்கான கொடியேற்றம் மே 25ம் தேதி நடைபெறுகிறது. கொடியேற்றத்துக்கான கயிற்றை, திரளான கிறிஸ்துவர்கள் பாரம்பரிய முறைப்படி,மேளதாளங்கள் முழங்க, தலையில் சுமந்து வந்து, கோயில் மேலாளர் ஆனந்திடம் வழங்கினர். கொடியேற்றத்திற்கான கயிற்றை, கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேலாக, கிறிஸ்துவர்கள் வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கைலியா குடும்பத்தைச் சார்ந்த மீனவர் சுரேஷ் கூறியபோது, கடந்த ஐந்து தலைமுறையாக, தங்கள் குடும்பத்தினர் சார்பில்,பகவதி அம்மன் கோயில் வைகாசித் திருவிழா கொடியேற்றத்திற்கு, கொடிக் கயிற்றை வழங்கி வருவதாகவும், சமூக ஒற்றுமையை ஏற்படுத்தும் விதமாக, இந்த ஆன்மிகப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா








