சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் நினைவு தினத்தையொட்டி அவர்களின் உருவப்படத்திற்கு திமுக எம்பி கனிமொழி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினர் தாக்கியதில் அவர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தந்தை மகனின் நினைவு தினத்தையொட்டி சாத்தான்குளத்தில் வைக்கப்பட்டிருந்த இருவரது உருவப்படத்திற்கு குடும்பத்தினர், நண்பர்கள் கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதேபோல், திமுக எம்பி கனிமொழி மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ ஊர்வதி அமிர்தராஜ் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்திய பின் திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார், ‘பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்டு ஒரு வருடம் நிறைவாகி உள்ளது. தொடர்ந்து காவல்நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் வன்முறையால் ஆண்டு தோறும் 100-க்கும் மேற்பட்டவர்களை நாம் இழக்கிறோம். அதிகாரம் ஏவிவிட்டுக் காவல் நிலையங்களில் மரணமடையக்கூடிய மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து குரல்கள் எழுப்பப்படுகிறது. இந்த வழக்கைக் கேரளாவிற்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்குத் தமிழக அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் பேசியுள்ளது. இவர்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆட்சியில் நியாயம் கிடைக்கும்’என்று அவர் தெரிவித்துள்ளார்.







