நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடங்கிய நிலையில், மாநிலங்களவை தலைவராக குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இரு அவைகளும் கூடிய நிலையில், மக்களவையில் மறைந்த உறுப்பினர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே, குடியரசு துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதன்முறையாக மாநிலங்களவை கூடிய நிலையில், அதன் தலைவராக ஜெகதீப் தன்கர் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை வரவேற்று பேசிய பிரதமர் மோடி, போராட்டங்களுக்கு மத்தியில் வாழ்க்கையில் முன்னேறி இந்த நிலையை ஜெகதீப் தன்கர் அடைந்துள்ளதாகவும் இது பலருக்கு உத்வேகமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
ஜெகதீப் தன்கர், விவசாயிகளின் பிரதிநிதியாக உயர்ந்த நிலையை அடைந்துள்ளார் என்றும் அவரின் அனுபவம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியம் என்றும் பிரதமர் மோடி கூறினார். அவரின் தலைமையில் புதிய உச்சத்தை அடைவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நாட்டின் இரண்டாவது பெரிய அரசியலமைப்பு பதவியில் பொறுப்பேற்றுள்ள ஜெகதீப் தன்கருக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டார். தமிழ்நாட்டு எம்.பி.க்கள் வைகோ, தம்பிதுரை, ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும், மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கரை வரவேற்று பேசினர்.
நிறைவாக பேசிய குடியரசு துணை தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர், மக்களின் முடிவை முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடாளுமன்றம் தற்போது பிரதிபலிப்பதாக கூறினார். உலகின் மிகச்சிறந்த அரசியலமைப்புகளில் ஒன்றாக நமது அரசியலமைப்புச் சட்டம் உள்ளது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.