ஐபிஎல் 2023 தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே அனைத்தும் விற்று தீர்ந்தது.
ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் வரும் 21 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், அடுத்தகட்டமாக பிளே ஆஃப் சுற்று போட்டிகள் வரும் 23 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் மற்றும் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறவுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வரும் 23 ஆம் தேதி முதல் குவாலிஃபயர் மற்றும் 24 ஆம் தேதி எலிமினேட்டர் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே இன்று நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பகல் 12 மணி முதல் ஆன்லைனில் டிக்கெட் விற்பனைகள் தொடங்கியது. ரூ.2000, ரூ.2500, ரூ.3000, ரூ.5000 என நான்கு பிரிவுகளில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதை அடுத்து, டிக்கெட் விற்பனை துவங்கிய 1 மணி நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.
ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இருக்கும் அணிகள் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். அந்த வகையில் குஜராத் அணி முதல் அணியாக தகுதி பெற்று முதல் இரண்டு இடங்களில் தனது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அதேநேரம் மீதம் இருக்கும் 3 இடங்களுக்கான போட்டி நெருக்கமான ஒரு சூழலில் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 7-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் அடைந்து 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதையும் படியுங்கள் : ’கழுவேத்தி மூர்க்கனை’ பாராட்டிய தயாநிதி அழகிரி!!
சென்னை அணிக்கு, டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் கடைசி போட்டி மீதம் இருப்பதால், அந்த போட்டியில் வெற்றி பெறுவதை அடுத்து தனது பிளே ஆஃப் உறுதி செய்துவிடும். இருப்பினும் நல்ல ரன் ரேட்டுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றால், வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள முதல் குவாலிஃபயர் போட்டியில் குஜராத் அணியை சென்னையில் எதிர்கொள்ளும். மாறாக சென்னை அணி புள்ளிப் பட்டியலில் 3வது இடம் பிடித்தால், எலிமினேட்டர் போட்டியை வரும் 24 ஆம் தேதி சென்னையில் எதிர்கொள்ளும் என்பதால், பிளே ஆஃப் சுற்றுக்கான டிக்கெட்டுகள் விற்பனையில் கூடுதல் சுவாரஸ்யம் நிலவுகிறது.