ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து இன்று (27.07.2024) காலை வினாடிக்கு 1.20 லட்சம் கன அடியாக இருந்த நிலையில் தற்போது 1,32,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், பரிசல் இயக்கவும் ஆற்றில் குளிக்கவும் 12 வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கா்நாடகம், கேரள மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜ சாகா் அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.
இதனால், கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளிலிருந்து விநாடிக்கு ஒரு லட்சம் கன அடி உபரிநீா் காவிரியில் திறந்துவிடப்படுகிறது. இதனை தொடர்ந்து, ஒகேனக்கல்லுக்கு வியாழக்கிழமை மாலை 50,000 கன அடியாக இருந்த நீா்வரத்து, வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 70,000 கன அடியாகவும், நண்பகல் 86,000 கன அடியாகவும், இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 98,000 கன அடியாகவும் அதிகரித்தது. இந்த நிலையில், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து இன்று (27.07.2024) காலை வினாடிக்கு 1.20 லட்சம் கன அடியாக அதிகரித்தது. இது மேலும் அதிகரித்து தற்போதைய நிலவரப்படி, வினாடிக்கு 1,32,000 கன அடியாக நீர்வரத்து உள்ளது. இதனால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
இந்நிலையில், காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்கவும், ஆற்றில் குளிக்கவும், 12-வது நாளாக தடை விதித்துள்ளது. இதனிடையே காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.







