“கல்விச் செலவை நான் ஏற்கிறேன்” – தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் குழந்தைகளுக்கு தமிழிசை சௌந்தரராஜன் உறுதி!

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமியின் குழந்தைகளுக்கான கல்விச் செலவை ஏற்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் உறுதியளித்துள்ளார்

 

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்த வரலட்சுமி, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் ஆறுதலும், உதவிகளும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநரும், பாஜகவின் மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன், உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது, வரலட்சுமியின் குழந்தைகளான அர்ஜுன் மற்றும் அக்ஷயா ஆகியோரின் எதிர்கால கல்விக்கு தான் உறுதுணையாக இருப்பதாகவும், அவர்களின் கல்லூரி வரையான அனைத்து கல்விச் செலவுகளையும் தானே ஏற்பதாகவும் அவர் உறுதி அளித்தார்.

இந்த அறிவிப்பு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. தமிழிசை சௌந்தரராஜனின் இந்த மனிதாபிமான உதவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, வரலட்சுமியின் குடும்பத்திற்குத் தமிழ்நாடு அரசு நிவாரண உதவிகளை அறிவித்திருந்தது. தற்போது, தமிழிசை சௌந்தரராஜனின் இந்த தனிப்பட்ட உதவி, குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.