குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை, திருமணநாளில் கத்தியால் குத்தி கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் அக்பர் காலனியில் வசித்து வருபவர்கள் அருள் – ரேவதி தம்பதியினர். இவர்கள் காதல் திருமணம் செய்து 25 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிரபல ஜவுளி நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வந்த அருள், தினந்தோறும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதால் ரேவதி கடந்த 1 வருடமாக கணவனை பிரிந்து அவரது தாய் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், அருள்-ரேவதியின் திருமண நாளான நேற்று வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற ரேவதியை தன்னுடன் வந்து குடும்பம் நடத்த அருள் அழைத்துள்ளார். அப்போது அவர் அழைப்பை ஏற்கமறுத்த ரேவதி தன்னுடைய உடைமைகளை தரும்படி கேட்டுள்ளார். உடைமைகளை தருவதாககூறி அழைத்து சென்றபோது அருள் வீட்டிற்கு அருகே உள்ள காமராஜர் சாலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அருள் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை குத்திவிட்டு தப்பிஓடியுள்ளார். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரேவதி ஆபத்தான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அறிந்த மயிலாடுதுறை போலீசார் அருள் கைது செய்து கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.







