கொரோனா காரணமாக, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் மிக அவசர வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் எம்.என்.செந்தில்குமார் வெளியிட்ட அறிவிப்பில், ஜூன் 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை மிக அவசரமான வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் அமர்வு, ஜூன் 1 முதல் 11ம் தேதி வரை வழக்குகளை விசாரிக்கும் எனவும், ஜூன் 1 முதல் 3ம் தேதி வரை நீதிபதிகள் ஆர்.சுப்பையா – எஸ்.கண்ணம்மாள் அமர்வு ரிட் வழக்குகளையும், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் – ஆர்.என்.மஞ்சுளா அமர்வு குற்ற வழக்குகளையும் விசாரிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆர்.சுப்பிரமணியன், என்.சதீஷ்குமார் ஆகியோர் முறையே ரிட் வழக்குகள், சிவில் வழக்குகள் மற்றும் முன்ஜாமீன் தவிர்த்து பிற குற்ற வழக்குகளை விசாரிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல ஜூன் 4ம் தேதி முதல் 8 ம் தேதி வரை நீதிபதிகள் என்.கிருபாகரன் – டி.வி.தமிழ்ச்செல்வி அமர்வும், நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் – ஆர்.பொங்கியப்பன் அமர்வும், நீதிபதிகள் வி.பார்த்திபன், எம்.சுந்தர், எம்.நிர்மல்குமார் ஆகியோரும் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 9 முதல் 11ம் தேதி வரை நீதிபதிகள் டி.ராஜா – வி.சிவஞானம் அமர்வு, நீதிபதிகள் எம்.துரைசாமி – ஆர்.ஹேமலதா அமர்வு மற்றும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அப்துல்குத்தூஸ், ஜி.கே.இளந்திரையன் ஆகியோர் வழக்குகளை விசாரிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல மதுரைக் கிளையை பொறுத்தவரை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் – எஸ்.ஆனந்தி அமர்வு, நீதிபதிகள் கே.கல்யாண சுந்தரம் – ஆர்.தாரணி அமர்வு, நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், ஏ.ஏ.நக்கீரன், பி.டி.ஆதிகேசவலு, ஜி.ஆர்.சுவாமிநாதன், சந்திரசேகரன் ஆகியோர் மூன்று பிரிவுகளாக வழக்குகளை விசாரிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாமீன் மனுக்களை பொறுத்தவரை, ஏற்கனவே மனு தள்ளுபடி ஆகியிருந்தால் அதே நீதிபதி முன்புதான் மீண்டும் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும், ஜாமீன் ரத்து கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களும் ஏற்கனவே ஜாமீன் வழங்கிய நீதிபதி முன்பாகத்தான் தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் ஆர்.என்.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







