என்எல்சி சுரங்கம் 5 வரை சுமார் 91 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட
உள்ளது. இனிமேல் என்எல்சிக்கு எதிராக போராட்டம் கடுமையாக இருக்கும் என
அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் நிலப்பறிப்பை தடுத்தல், நிலக்கரி சுரங்க விரிவாக்கம் மற்றும் புதிய நிலக்கரி சுரங்கங்கள் இல்லாத பகுதியாக கடலூர் மாவட்டத்தை அறிவிக்க செய்தல் குறித்து விவசாய சங்கங்கள், பொதுநல அமைப்புகள், மக்கள் இயக்கங்கள், வணிகர் அமைப்புகள், இளையோர் மற்றும் மகளிர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், கடலூர் மாவட்டத்தை விட்டு என்எல்சி வெளியேற வேண்டும். என்எல்சிக்கு ஆதரவாக தமிழக அரசு நிலம் கையகப்படுத்தக் கூடாது என்ற ஒற்றைக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்எல்சியால் தொடர்ந்து கடலூர் மாவட்டத்திற்கு பாதிப்பு. என்எல்சி வெளியேற வேண்டும் என்ற ஒற்றைக் கருத்து கூட்டத்தில் தெரிவிக்கபட்டது. வருகின்ற காலத்தில் சுரங்கம் 5 வரை 91 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்த என்எல்சி திட்டமிட்டுள்ளது என்றார்.
மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நிலம் எவ்வாறு கையகப்படுத்தப்படும் என கேள்வி எழுப்பிய அவர் இது நெய்வேலி பிரச்சினை அல்ல, 5 மாவட்டத்தின் பிரச்சினையும், சென்னை குடிநீர் சார்ந்த பிரச்சினை என்றும், உலக நீர் நாள் தினத்தில் 200 கிராமங்களில் கிராமசபை கூட்டத்தில் என்எல்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
விவசாய பட்ஜெட் ஒருபக்கம், விவசாய நிலம் கையகப்படுத்துதல் ஒருபக்கம் என்று இந்த
Double stand வேண்டாம். தொழிற்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் பேசிய
கருத்துக்கு என்னுடைய ஆதாரத்தை அறிக்கையாக கொடுத்துள்ளேன் என தெரிவித்தார்.
என்எல்சியின் தரகராக மாவட்ட ஆட்சியர் செயல்படுகின்றார். என்எல்சிக்கு விளம்பரம் அளித்ததாக மக்கள் தொடர்பு அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முறையாக மாவட்ட ஆட்சியர் தான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்த அன்புமணி ராமதாஸ், மக்களுக்கு இப்போதுதான் என்எல்சி பிரச்சினை பற்றி புரிதல் வந்துள்ளதாகவும், இனிவரும் காலங்களில் போராட்டம் அமைதியான வழியில் கடுமையாக இருக்கும் என எச்சரித்தார்.







