தரையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்… 6 பேருக்கு நேர்ந்த சோகம்!

உத்தரகாண்டில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் இன்று காலை (மே 8) ஹெலிகாப்டர் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டரில் விமானி உட்பட 7 பேர் பயணம் செய்தனர். பயணிகளில் நான்கு பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள், இருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். உத்தரகாசியின் கங்கனானி அருகே சென்றபோது இன்று காலை 8.45 மணியளவில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்  விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். தகவலறிந்த ராணுவ வீரர்கள், பேரிடர் மேலாண்மை குழு, ஆம்புலன்ஸ், வருவாய் குழுவினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், படுகாயமடைந்தவருக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் விவரம் ;
மும்பையைச் சேர்ந்த கலா சோனி (61), விஜய ரெட்டி (57), மற்றும் ருச்சி அகர்வால் (56); உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் ராதா அகர்வால் (79); மற்றும் ஆந்திராவை சேர்ந்த வேதவதி குமாரி (48). குஜராத்தைச் சேர்ந்த விமானி கேப்டன் ராபின் சிங் (60).
ஆந்திராவைச் சேர்ந்த பாஸ்கர் (51) காயமடைந்தார்.

இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, “உத்தரகாசி கங்கானி அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிலர் உயிரிழந்ததாக மிகவும் சோகமான செய்தி கிடைத்துள்ளது. நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக எஸ்.டி.ஆர்.எஃப் மற்றும் மாவட்ட நிர்வாகக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்தை அடைந்துள்ளன. விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்களின் குடும்பங்களுக்கு இந்த துக்கத்தைத் தாங்கும் வலிமையை வழங்கவும் கடவுள் துணைநிற்பார். காயமடைந்தவருக்க தேவையான அனைத்து உதவிகளை வழங்கவும், விபத்து குறித்து விசாரிக்கவும் நிர்வாகத்திற்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். இது தொடர்பாக அதிகாரிகளுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன், மேலும் ஒவ்வொரு சூழ்நிலையும் கண்காணிக்கப்படுகிறது” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.