பெரியகுளம் லட்சுமிபுரம் பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையால் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தின.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் பகுதியில் நேற்று மாலை 6 மணி அளவில் இருண்ட மேகமூட்டம் மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் , லட்சுமிபுரம் முதல் தேனி மாவட்ட நீதிமன்றம் வரை சுமார் 50க்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து சாலை ஓரங்களில் உள்ள கடைகள் வீடுகள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மீது விழுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தின.
100 ஆண்டுகள் பழமையான ராட்சசன் மரங்கள் சாலையில் குறுக்கே விழுந்துள்ளதால் தேனி பெரியகுளம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், புறவழியாக தற்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது.
மேலும் முறிந்து விழுந்த மின்கம்புகளால் லட்சுமிபுரம் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டு நெடுஞ்சாலை துறையினர் சாலைப் பகுதியில் உள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் இரவு நேரத்தில் மின்சாரம் தடைபட்டதால் லட்சுமிபுரம் பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.







