திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்த
வழக்கில், அவிநாசிபாளைய தலைமை காவலர் ஜெகநாதனை, திருப்பூர்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய் பணிநீக்கம் செய்தார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் சரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில், தலைமைக் காவலராக ஜெகநாதன் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு மோசடி வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த வாசு குமார் என்ற நபருக்கு, தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்ததாக புகார் எழுந்திருந்தது.
மேலும், அதே ஆண்டு காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த கார்த்திகா பிரியதர்ஷினி என்ற இளம்பெண் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்தும்,
பெண்மைக்கு களங்கம் விளைவித்ததாக பாதிக்கப்பட்ட பெண் பல்லடம்
அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தலைமை காவலர் ஜெகநாதன் மீது
புகார் அளித்தார்.
இந்த இரண்டு வழக்குகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில்,
பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதனால், திருப்பூர்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய், தலைமை காவலர் ஜெகநாதனை பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
—கு.பாலமுருகன்







