2023ஆம் ஆண்டிற்கான ஆளுநரின் உரை உப்பு சப்பில்லாத உரை என்று அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டப்பேரவையில் வாசிக்கப்பட்ட ஆளுநரின் உரை, திமுக அரசின் ஆளுமைத் திறமையின்மையை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என தமிழ்நாட்டு மக்களை வீழ்ச்சியை நோக்கி திமுக அரசு அழைத்துச் செல்வதாக குற்றம்சாட்டிய அவர், பொங்கலை முன்னிட்டு 1000 ரூபாய் வழங்க இருப்பதை ஆளுநர் உரையில் பெரிய சாதனையாக குறிப்பிட்டிருப்பது நகைப்புக்குரியது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மேடைக்கு மேடை திமுக பேசியாக குறிப்பிட்டுள்ள அவர், 20 மாதங்கள் கடந்த பின்னர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் கூறப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார். இதேபோல், இல்லம் தேடிக் கல்வித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம், காலை உணவுத் திட்டம் , உள்ளிட்ட திட்டங்கள் பழமையானது என்றும், ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் மீது அக்கறை இல்லாத, இளைஞர்களின், எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கக் கூடிய, வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு வழிவகுக்கின்ற, வாக்குறுதிகளுக்கு செயல்வடிவம் கொடுக்காத உப்பு சப்பில்லாத உரையாக இந்த ஆளுநர் உரை விளங்குவதாகவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.