போராட்டத்தின் போது அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை மாதவரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி எப்போதும் அரசு ஊழியர்களின் பொற்கால ஆட்சி என்றார். மேலும் அரசு ஊழியர்கள் இல்லாவிட்டால் அரசாங்கமே இருக்காது எனவும் அரசு ஊழியர்கள் தான் அரசாங்கம் என்றும் தெரிவித்தார்.
மாநாட்டில் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செய் அல்லது செத்துமடி என்பது தனது கொள்கை அல்ல, செய்து முடித்துவிட்டு மடிய வேண்டும் என்பதே தனது கொள்கை எனக் கூறினார். பின்பு போராட்டத்தின் போது அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படும் எனவும் ஒழுங்கு நடவடிக்கை மூலம் பதவி உயர்வு பாதிக்கப்பட்டிருந்தால் சரி செய்யப்படும் என்றும் அறிவித்தார்.







