தமிழகத்தில் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை அதிகமாக இருப்பதாகவும்,அதனை அடியோடு ஒழிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
யோனக்ஸ் சன்ரைஸ் அகில இந்திய மாஸ்டர்ஸ் ரேங்கிங் பேட்மிண்டன் போட்டி சென்னை தாம்பரம் அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள விளையாட்டு பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. இதில் 35 வயது முதல் 75 வயது வரையிலான வயதுப்பிரிவுகளில் 1000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினார்கள்.

போட்டிகளின் முடிவில் இந்திய பேட்மிண்டன் சங்க துணைத்தலைவரும்,தமிழக பேட்மிண்டன் சங்க தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் தமிழகத்தில் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் அதிகமாக இருப்பதாகவும் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் பள்ளி மாணவர்கள் கஞ்சா பிடிப்பதை சமூக வலைத்தளங்களில் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார். போதை பொருட்களை அடியோடு ஒழிக்க வேண்டும், அதே நேரத்தில் மதுவை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும், கூலிப்படையைத் தமிழக அரசு அடியோடு ஒழிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.






