அதிமுகவில் இரண்டு தரப்பினர்களுக்கு இடையே மோதல் போக்கு முற்றியுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பக்கம் தான் பகவான் உள்ளார் என அமைச்சர் துரைமுருகன் கிண்டல் செய்துள்ளார்.
சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் கிழக்கு பகுதி சார்பில் திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ‘ஒன்றென இணைவதே இனமாம் உழைப்பவர் இனமே அதை காணும்’ என்கின்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திராவிட கழக பிரச்சார செயலாளர் அருள்மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 56 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். நான் 53 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். இந்த திராவிட இயக்கம் இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாடு இன்றளவும் அடிமையாகவே இருந்திருக்கும் என்றார்.
பெரியார், அண்ணா போன்றவர்கள் தோன்றாமல் இருந்திருந்தால் வட மாநிலத்தை போன்று சுரண்டி இருப்பார்கள். காமராஜர், கருணாநிதி மற்றும் எம்ஜிஆரை தொடர்ந்து தற்பொழுது மாணவர்களின் உடல் நலத்தைக் காக்கும் வகையில் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிற்றுண்டி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார் என குறிப்பிட்டார். மாணவர்கள் பசியில் பள்ளியில் இருக்கக்கூடாது என்பதற்காகவே நமது முதலமைச்சர் தற்போதைய திட்டத்தை தொடங்கி உள்ளார்.
அரசு பள்ளியில் பயின்று அரசு கல்லூரியில் சேரக்கூடிய மாணவிகளுக்கு ஊக்கத்தொகையாக ஆயிரம் ரூபாய் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக மாணவிகளின் அம்மாவிற்கும் ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளோம். அகில இந்தியாவில் உள்ள அனைத்து முதலமைச்சர்களின் பார்வையும் நமது முதலைமச்சர் மீது தான் உள்ளது.
தமிழ்நாட்டில் எதிர்கட்சி உள்ளதா என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவரை தேடிக்கொண்டிருப்பதாகவும், திமுக வளமாக உள்ளதாகவும் நீங்கள் இருவரும் சண்டை போட வேண்டாம் என்றும் பகவான் உன் பக்கம் (எதிர்க்கட்சி தலைவர்) இருக்கிறார் என்றும் எதிர்க்கட்சியை கிண்டல் செய்து பேசினார்.