10.5 சதவீத உள்ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அபாண்ட பழி சுமத்தியுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையான தரவுகளை அளிக்கத் தவறியதால்தான், 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஆனால், அதிமுக ஆட்சி கொண்டு வந்த சட்டம் என்றாலும், உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் அனைத்து விதமான வாதங்களையும் திமுக அரசு முன் வைத்தது.
இந்த வழக்கில் எந்தெந்த மூத்த வழக்கறிஞர்கள் வாதாடினார்கள் என்பது தீர்ப்பிலேயே இடம்பெற்றுள்ளது. இந்த விஷயம் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கும், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் புரியவில்லை. 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார்” என்று அமைச்சர் துரைமுருகன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.







