தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தனியார் மயமாக்கப்படும் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்து இன்று பொன்விழாவை கொண்டாடி வருகிறது. இந்நிறுவனம் ஏழை எளிய மக்களின் தேவையான அத்தியாவசிய பொருள்களை கொள்முதல் செய்தும், அவற்றை சேமித்தும், வினியோகித்தும் மக்களின் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் மிகச் சிறப்பான பணியை செய்து வருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், விவசாயிகளிடம் இருந்து நெல், உளுந்து, பருப்பு போன்றவற்றை கொள்முதல் செய்கிறது .
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், தமிழக அரசிற்குச் சொந்தமான 21 நவீன அரிசி ஆலை மூலமாகவும், 500-க்கு மேற்பட்ட தனியார் நவீன அரிசி ஆலைகள் மூலமாகவும் நெல்லை அரவை செய்து, அரிசியாக மாற்றி பொது விநியோகத் திட்டத்திற்கு தமிழக மக்களுக்கு வழங்கும் மகத்தான பணியைச் செய்து வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளித்துவரும் மதிய உணவுத் திட்டத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணைய் உள்ளிட்ட பொருள்களை கொள்முதல் செய்து அவற்றை விநியோகம் செய்தும், மக்களின் அன்றாட தேவையான அனைத்து வகையான மளிகைப் பொருள்களை , நியாய விலைக் கடை, அமுதம் பல்பொருள் அங்காடி மூலம் குறைந்த விலைக்கு அளித்து மக்கள் பணியாற்றி வருகிறது .
இந்நிலையில், அரசிற்குச் சொந்தமான 21 நவீன அரிசி ஆலையில் இருந்து 12 நவீன அரிசி ஆலைகள் தனியார் மயம் ஆக்கப்படும் என்ற செய்தி வெளிவந்துள்ளது. இவ்வாறு மக்களின் நேரடி தொடர்பில் இருக்கும் நுகர்பொருள் வாணிபக் கழகம் தற்பொழுது தனியார் மயம் ஆக்கப்படும் என்ற செய்தி, மக்களிடையேயும் , இந்நிறுவன தொழிலாளர்களிடையேயும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர்களை நியமிக்க அத்துறையில் இல்லாமல் வேறு துறையில் இருந்து பணியமர்த்துவது நுகர்பொருள் வாணிபக் கழகத்தை தனியார் மயம் ஆக்குவதற்கான அச்சாரமோ என்று தொழிலாளர்களிடையே கலக்கத்தையும் , சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது .
பொது மக்களுக்கு நேரடியாக சேவை செய்து வரும் நுகர்பொருள் வாணிப கழகம் தனியார் மயம் ஆனால் நிர்வாக சிக்கலும், சீர்கேடும் நடைபெற மிகுந்த வாய்ப்புள்ளது . மேலும், நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் உள்ள உயர் பதவிகளை அந்நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களைக் கொண்டே நிரப்ப வேண்டும் என்றும், தனியார் மயம் ஆக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும் என்ற தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா