மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதிக்கப்பட்டதாக அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.
செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து கொண்டாட தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. எனினும், வீடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாம் என தெரிவித்துள்ளது. ஆனால், விழாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டுமென பாஜக மற்றும் இந்து அமைப்புகள் வலியுறுத்தின.
இந்த நிலையில் சட்டமன்றத்தில் இன்று இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் போது பேசிய நாகர்கோயில் பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி, விநாயகர் சதுர்த்தி நடத்த தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கொரோனா 3வது அலை வரலாம் என்பதால் மக்கள் கூடும் வகையிலான விழாக்களை நடத்த தடைவிதிக்க மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா வலியுறுத்தி இருக்கிறார். அதன் அடிப்படையில்தான் தமிழ்நாடு அரசு விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடத் தடை விதித்தது என்றார்.







