உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெயரில் போலியான கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயன்ற சம்பவத்தில் சைபர் கிரைம் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோரின் பேரில் அதிகளவில் மோசடி நடந்து வருகிறது. அந்த வகையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெயரில் மோசடி நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, கைலாஷ் மேக்வால் என்ற நபருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெயர் கொண்ட ஐடியில் இருந்து 500 ரூபாய் பணம் கேட்டு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அந்த குறுஞ்செய்தியின் ஸ்க்ரீன்ஷாட்டை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்தில், “நான்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி. நான் அவசரமாக கொலீஜிய ஆலோசனைக்கு செல்ல டாக்சி புக் செய்ய ரூ.500 பணம் வேண்டும். நான் நீதிமன்றத்தை சென்றதும் உங்களது பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த குறுஞ்செய்தியின் நம்பகத்தன்மையை அதிகரிக்க இதனை எனது ஐபாட்-ல் இருந்து அனுப்புகிறேன் என்று மற்றொரு குறுஞ்செய்தியை அவர் அனுப்பியுள்ளார். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தலைமை நீதிபதியின் புகாரை கவனத்தில் கொண்டு சைபர் கிரைம் பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.







