கடலூர் மாவட்டத்தில் ஆட்சியர் பெயரில் அரசு அலுவலர்களிடம் வாட்ஸ் அப் மூலம் பண மோசடியில் ஈடுபட முயன்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியத்தின் பெயர் மற்றும் அவரது புகைப்படத்தை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது செல்போனில் முகப்பு படமாக வாட்ஸ்அப்பில் வைத்துள்ளார். மேலும், அந்த எண்ணில் இருந்து பல்வேறு அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அனுப்புவதுபோல் தகவல்களை அனுப்பி அதில் தனக்கு பணம் அனுப்புமாறு கூறியுள்ளார்.
இந்த குறுந்தகவலை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அரசு அலுவலர்கள் தங்களது உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கண்காணிப்பாளர், மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் ஆட்சியர் பெயரைப் பயன்படுத்தி அரசு அலுவலர்களுக்கு பணம் கேட்டு குறுந்தகவல் அனுப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோரின் பெயரில் இந்த கும்பல் பண மோசடியில் ஈடுபட முயன்றது குறிப்பிடத்தக்கது.
-ம.பவித்ரா







