சூடானில் ஏற்பட்ட பயங்கர மோதலில் பலி எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1800 பேர் காயமடைந்துள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அகற்றி விட்டு, ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் ராணுவ ஆட்சிக்கு எதிராக அதிருப்தியில் உள்ள துணை ராணுவப் படையினர் ஆயுதமேந்திய போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருதரப்புக்கும் இடையிலான துப்பாக்கிச் சூடு, வன்முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சூடான் தலைநகர் கர்த்தூமில் உள்ள சர்வதேச விமான நிலையம், அதிபர் மாளிகை உள்ளிட்ட பகுதிகளை துணை ராணுவத்தினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். சூடான் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படைக்குக்கு இடையில் மோதல் அதிகரித்துள்ளது. தொடரும் துப்பாக்கிச் சத்தத்தினால், மக்கள் பீதியில் உள்ளனர். ஆனாலும் ‘நாட்டைக் காப்போம்’ என்று ராணுவம் சொல்கிறது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் இந்தியர் ஒருவர் பலியானார். இது குறித்து இந்திய தூதரகம் தனது அதிகார்ப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது “சூடானில் உள்ள டால் குரூப் நிறுவனத்தில் பணிபுரியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆல்பர்ட் ஆஜெஸ்டின், புல்லட் தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அடுத்த கட்ட ஏற்பாடுகளைச் செய்ய அவர்து குடும்பம் மற்றும் மருத்துவ அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்பு கொண்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இந்திய தூதரகம், சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தியது.
இந்த நிலையில் சூடானில் நடைபெற்று வரும் இந்த கொடூர தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலியான நிலையில் இதுவரை 200பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1800 பேர் காயமடைந்துள்ளதாக நியூயார்க் ரிப்போர்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது. அதேபோல சூடானுக்கான ஐரோப்பிய தூதர் அவரது வீட்டில் தாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.







