மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் கடைமடைக்கு வந்தடைந்த போது, நெல்மணிகள் மற்றும் மலர்கள் தூவி விவசாயிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 12ம் தேதி தண்ணீர் திறந்து வைத்தார். மேலும் நாகை மாவட்டத்தில் 3 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பில் 378 கிலோ மீட்டர் தொலைவில் வாய்க்கால்கள், 48 ஆறுகளில் தூர்வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கடைமடை பகுதியான நாகை மாவட்டத்திற்கு காவிரி நீர் வந்து சேர்ந்தது.
மாவட்டத்தின் கடைசி நீர் ஒழுங்கியான பாப்பாகோவில் அடுத்த நரியங்குடி ஓடம்போக்கியாறு வந்து சேர்ந்த காவிரி நீரை, பொதுமக்களும் விவசாயிகளும் ஆரத்தி எடுத்தும், குலவையிட்டும், மலர் மற்றும் நெல்மணிகளைத் தூவியும் உற்சாகமாக வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து பெண்கள் மகிழ்ச்சியுடன் கும்மியடித்து, பாட்டுப்பாடி காவிரித் தாயை வணங்கினர்.
![](https://i0.wp.com/news7tamil.live/wp-content/uploads/2023/06/postcard-10-2023-06-24T093340.512.jpg?resize=1400%2C787&ssl=1)
காவிரி நீர் கடைமடை பகுதிக்கு வந்ததன் மூலம் டெல்டா பகுதியில் 50 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும் மற்றும் 5 லட்சம் விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் வருவாய் பெறுவார்கள் என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். உரிய நேரத்தில் காவிரி நீரை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள், இந்தாண்டு கர்நாடக அரசு வழங்க வேண்டிய 9 டிஎம்சி தண்ணீரை உடனடியாக விவசாயிகளுக்குக் கேட்டு பெற்றுத் தர வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் நாகை கடைமடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.