எடப்பாடி ஒன்றியம் வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தள்ளுபடி செய்த நகை மற்றும் டெபாசிட் தொகைகளை திரும்பத் தர வேண்டும் என விவசாயிகள் முற்றுகைப்போராட்டத்தி்ல் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் வெள்ளரி வெள்ளி ஊராட்சியில் ஆயிரக்கணக்கான
உறுப்பினர்களை கொண்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு
வருகிறது. இச்சங்கத்தில் ஏராளமான விவசாயிகள் நகை கடன், பயிற்கடன் பெற்றதோடு
டெபாசிட்டும் செய்து வந்துள்ளனர்.
இதனிடையே இந்தக் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் மோகன் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் நகை மற்றும் பணத்தை கையாடல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவருக்குச் சொந்தமான சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று வெள்ளரிவெள்ளி கிராமப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தள்ளுபடி செய்த நகையையும், டெபாசிட் செய்த தொகையையும் திருப்பித் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி வெள்ளரிவெள்ளி கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண் பூங்கொடி கூறும்போது தனது நகையை அடமானம் வைத்த போது நகையை மட்டும் வாங்கி வைத்துக்கொண்டு பணம் தரவில்லை எனவும் தற்போது பணத்தை வட்டியுடன் செலுத்தினால் மட்டுமே நகையை திருப்பி தரப்படும் என்று கூறுவதாகவும் தெரவித்தார்.
மேலும் டெபாசிட் செய்த தொகையை திருப்பித் தர மறுப்பதாகவும் குற்றம் சாட்டினர். இத்தகவலறிந்த பூலாம்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனைவரையும் அனுப்பி வைத்தனர். இதனால் வெள்ளரிவெள்ளிப் பகுதியில் சிறிது நேரம் பெரும்பரபரப்பு நிலவியது.
ரெ.வீரம்மாதேவி
டெபாசிட் செய்த தொகையையும் திருப்பித் தரக்கோரி வேளாண் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.