போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது, பொதுமக்களுக்கு இடையூறாக கூட்டம் கூட்டியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் யூடியூர் டிடிஎஃப் வாசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குனர் செந்தில் செல்லம்
என்பவரது திரைப்பட அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக யூடியூபர் டிடிஎஃப் வாசன்
இன்று வருகை தந்தார். அப்பொழுது அவரைக் காண ஏராளமான பள்ளி மாணவர்களும், இளைஞர்களும் கூடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
டிடிஎஃப் வாசனுடன் வந்தவர்கள் தாறுமாறாக இரண்டு சக்கர வாகனங்களில் வந்து
சாலைகளில் நிறுத்தினர். இதனால் போலீசார், டிடிஎஃப் வாசன் ஆதரவாளர்கள் மீது தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். மேலும் 200க்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.
இந்நிலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது, பொதுமக்களுக்கு இடையூறாக கூட்டம் கூட்டியது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் டிடிஎஃப் வாசன் மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான இயக்குனர் செந்தில் செல்லம் மற்றும் விக்னேஷ் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.







