பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருவது நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது என மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் உறுப்பினர்கள் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறதா? அதனை தடுப்பதற்கு மத்திய அரசு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எழுத்து பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி, காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு என்பது மாநிலத்திற்கு கீழ் வருகின்ற தனிப்பட்ட அங்கமாகும் இருப்பினும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு மத்திய அரசு விரைவு நீதிமன்றங்கள்,1023 சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் 389 போஸ்கோ நீதிமன்றங்கள் அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய அமைச்சர அளித்துள்ள புள்ளி விவரங்களின்படி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உட்பட 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெண்களுக்கு எதிராக 2020ம் ஆண்டில் 3,71,503 குற்றங்கள் நடந்துள்ளதாகவும், 2021ம் ஆண்டில் 4,28,278 குற்றங்களாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது என்றார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை 2019ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான மொத்த குற்றங்கள் 5,934-ஆக இருந்த நிலையில், 2020ம் ஆண்டு 6,630 ஆகவும், 2021ம் ஆண்டில் அவை மேலும் அதிகரித்து 8,501ஆக உயர்ந்துள்ளது என மத்திய அரசின் புள்ளிவிவரத்தின் குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் கூறினார்.








