ஆரணி அடுத்த சோமந்தாங்கல் கிராமத்தில், புதிய சமையலறை கட்டிடம்
இருந்தும் பயன்பாட்டிற்கு வராமல் – வகுப்பறை கட்டிட வராண்டாவில் பள்ளி
மாணவர்களுக்கு சமையல் செய்து வழங்கும் அவலம் நிலவுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அரியப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட
சோமந்தாங்கல் கிராமத்தில், அரசு நடுநிலைப் பள்ளியில் ஆரணி ஊராட்சி
ஒன்றியத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு, சத்துணவு கூடம் மற்றும் சத்துணவு
பொருட்கள் வைக்க கட்டிடம் கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. தற்போது வரை
பயன்பாட்டிற்கு வராமல் இன்று வரை உள்ளது.
இதனால், மாணவர்களுக்கு சத்துணவு பணியாளர்கள் பள்ளி வகுப்பறைகள்
செயல்படும் கட்டிடத்தில் உள்ள வராண்டாவில், சத்துணவு சமைத்து தினமும்
வழங்கி வருகின்றன. இவ்வாறு வராண்டாவில் சத்துணவு சமைக்கும் போது,
அதன் அருகே வகுப்பறையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சமையலின்
நெடிகள், அனல் மற்றும் சத்தங்களைக் கேட்டு பாடங்களை சரிவர கவனிக்க
முடியாமல் கஷ்டப்பட்டு வந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து புதிய கட்டிடம் கட்டப்பட்டும் சாவியை ஆரணி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், சத்துணவு பணியாளர்களிடம் வழங்கப்படவில்லை. இதனால் கடந்த ஓராண்டுக்கு மேலாக, அந்த புதிய சமையலறை சத்துணவு கூடும் பயன்பாடு இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. சத்துணவு கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென,
பள்ளி மாணவர்களும் அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கு. பாலமுருகன்