அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில், இபிஎஸ் தரப்பினர் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இருதரப்பு வாதங்களும் கடந்த 22ம் தேதி முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று காலை நீதிபதி கே.குமரேஷ்பாபு தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 4 இடைக்கால மனுக்களும் நிராகரிப்பட்டன.
இதையும் படியுங்கள் : NCL 2023 : தூத்துக்குடி வஉசி பொறியியல் கல்லூரியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி அபாரம்
மேலும் பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டும் என்று, ஓபிஎஸ் அணி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ’தனி நீதிபதியின் உத்தரவு முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. தனி நீதிபதியின் உத்தரவு கட்சி விதிகளுக்கு எதிரானது. தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது, தனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இபிஎஸ் சார்பில் வழக்கறிஞர்கள் கௌதம்குமார், பாலமுருகன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.